அத்தி வரதரை தரிசிக்க விவிஐபி பாஸ் தாங்க.. கலெக்டருக்கு சிபாரிசு கடிதம் அனுப்பிய திமுக எம்பிக்கள்
காஞ்சிபுரம்: அத்தி வரதரை தரிக்க தனது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு விவிஐபி நுழைவு சீட்டு அளிக்கும்படி அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் திமுக ராஜ்யசபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தனது உறவினர் குடும்பத்தினருக்கு நுழைவுசீட்டு தரும்படி கடிதம் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான கடித நகல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலின் மூலவரான அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நீருக்குள் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த நிகழ்வு ஜுலை 1ம் தேதி தொடங்கி நடந்து அடுத்த மாதம் வரை நடக்கிறது. இந்த விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது. தினமும் அதிகாலையில் இருந்தே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனது மனைவி அனுசியா மற்றும் அவரது குடும்பத்தினர் அத்திவரதரை தரிசிக்க விவிஐபி நுழைவு சீட்டு மற்றும் வாகன அனுமதி அளிக்கும்படி காஞ்சிபுரம் கலெக்டருக்கு அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதேபோல் திமுக ராஜ்யசபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தனது உறவினர் திருநாவுக்கரசு குடும்பத்தினர் கடந்த 3ம் தேதி அத்தி வரதர் மூலவரை சிறப்பு தரிசனம் செய்ய 6 நுழைவுச்சீட்டும் வாகன பாஸ் அனுமதியும் வழங்குமாறும் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஒரு கடிதமும் பரவி வருகிறது.
அத்தி வரதரை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா நேரில் சென்று தரிசித்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார் என்பது நினைவிருக்கலாம்.