காஞ்சிபுரத்தில் தெறித்து ஓடும் பாலாறு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நிவர் புயல் கொடுத்த கனமழையால் வேலூரில் பெருமழை பெய்துள்ளது பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. காஞ்சிபுரம் பாலாற்றில் 10000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரி
காஞ்சிபுரம்: பாலாற்றில் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு 222 கிமீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப்பகுதியில் கடலில் கலக்கிறது.
பல ஆண்டு காலமாகவே வறண்டு கிடந்த பாலாறு நிவர் புயல் கொடுத்த பெருமழையால் உயிர் பெற்றுள்ளது. தற்போது பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக, காவேரிப்பாக்கம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் உள்ள பெரும்பாக்கம், முசரவாக்கம், விஷார், செவிலி மேடு, தேனம்பாக்கம், விப்பேடு, வாலாஜாபாத், வில்லிவாக்கம், உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாவ்.. சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரிதான சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காவேரிப்பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், சமுதாயகூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.