அத்திவரதர் கோவிலில் பட்டாகத்தியுடன் சுற்றிய மர்ம நபர்கள்.. 4 பேரை பிடித்த போலீஸ்.. தீவிர விசாரணை!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பட்டாகத்தியுடன் சுற்றிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் இந்தியா முழுக்க பிரபலம். இவரை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு குவிந்து வருகிறார்கள்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவர் எழுந்தருளுவார் என்பதால், நாடு முழுக்க தற்போது பிரபலமாகி உள்ளது இந்த கோவில். முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சியினர், பிரபலங்கள் கூட இங்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
மக்கள் கூட்டம்
அதிலும் கடந்த ஒரு வாரமாக, பல மாநிலங்களில் இருந்து இவரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிபுரத்தை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் கொண்டு சென்று விடுவார்கள். இதனால் அங்கு கூட்டம் அலைமோதி வருகிறது.
என்ன திணறல்
இந்த நிலையில் அத்திவரதர் கோவிலில் பார்க்கிங் அருகே 4 பேர் பட்டாகத்தியுடன் இன்று சுற்றினார்கள். முதுகில் பட்டாக்கத்தியை வைத்து இருந்த நான்கு பேரும், கோவில் பார்க்கிங் அருகே நீண்ட நேரம் சுற்றிக்கொண்டு இருந்தனர். இரண்டு பேர் வெள்ளை உடை அணிந்து இருந்தனர்.
போலீசில் புகார்
இவர்கள் அங்கே ஏன் நிற்கிறார்கள், என்ன காரணம் என்று தெரியாமல் பக்தர்கள் பலர் குழம்பிப் போயினர். இதையடுத்து அங்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிலர் உடனடியாக போலீசுக்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து அங்கு வந்த போலீசார், உடனடியாக அந்த 4 பேரையும் கைது செய்தனர்.
தீவிர விசாரணை
இந்த நான்கு பேரிடமும் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ன காரணத்திற்காக அவர்கள் அங்கே நின்றனர். இவர்களுக்கு பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.