காவி உடையில் காட்சியளித்த அத்தி வரதர்... தரிசனம் செய்தார் ஹெச். ராஜா
காஞ்சிபுரம்: காவி உடையில் இன்று காட்சி தரும் காஞ்சிபுரம் அத்திவரதரை பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி விமரிசையாக தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
அத்திரவரதர் உற்சவம் தொடங்கி இன்றுடன் 12 நாட்கள் நிறைவடைகிறது. இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அந்த வகையில் அத்திவரதர் இன்று காவி உடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
வழக்கம் போல் இன்று காலை 5 மணியளவில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்தார். காவி உடையில், உடல் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அத்திரவரதரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றபடி தரிசித்து வருகின்றனர்.
மேலும், இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அத்திவரதரை தரிசனம் செய்ய வருகை புரிவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு அத்திரவரதரை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
க்ளைமேக்ஸ் நோக்கி கர்நாடக அரசியல் சிக்கல்.. நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் குமாரசாமி!
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ,காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்து அத்திவரதரை தரிசித்தார். இதையொட்டி சிறப்பு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகம் சார்பில் ஹெச். ராஜாவிற்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அத்திவரதர் தரிசனத்திற்கு தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.