18 வயது மகளை சீரழித்த மிருகம்.. போலீஸுக்கு போன தாய்.. மாமல்லபுரத்தில் பரபரப்பு
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
மாமல்லபுரம்: 18 வயசு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார் பெற்ற தகப்பன். அவர் பெயர் காந்தி.
கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகையை சேர்ந்தவர் காந்தி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் வீட்டிலேயே இருப்பாராம் காந்தி. மனைவிதான் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்.
காந்திக்கு குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. மேலும் மனைவி வீட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், தனியாக இருக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லையை அளித்து இருக்கிறார். மகளுக்கு இப்போது 18 வயதாகிறது. கடந்த 5 வருடமாகவே இப்படித்தான் மகளை சீரழித்து இருக்கிறார்.
அழுது தவித்த மகள்
ஒவ்வொரு முறையும் இப்படி மகளை நாசம் செய்துவிட்டு, இதைப்பற்றி அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று மகளை மிரட்டி உள்ளார். இதனால் மகளும் தந்தைக்கு பயந்து போய் வீட்டில் யாரிடமும் சொல்லாமலேயே அழுது தவித்து வந்துள்ளார்.
அதிர்ச்சியான மனைவி
ஆனால் தினமும் தொல்லை என்பது பெற்ற தகப்பனிடம் அதிகரிக்கவும், மகளால் ஒரு அளவுக்கு மேல் தாங்க முடியவில்லை. அதனால் அம்மாவிடம் சென்று 5 வருஷங்களாக நடந்த சம்பவத்தை சொல்லி விட்டார். இதனால் கடுமையாக அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரை கண்டித்தார்.
மகளிர் போலீசில் புகார்
மகளிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்தார். ஆனால் காந்தி, மகள், மனைவியை சேர்த்து மிரட்ட ஆரம்பித்தார். தன்னை இவ்வளவு நாள் சீரழித்து, மிரட்டி வந்த தந்தை, இப்போது அம்மாவையும் மிரட்ட தொடங்கி விட்டதால், நேராக மாமல்லபுரம் மகளிர் போலீசுக்கு சென்று விட்டார்.
பாய்ந்தது போக்சோ
அங்கு 5 வருடமாக தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்தார். இதையடுத்து போலீசார் காந்தியை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். பெற்ற மகளுக்கே 5 வருடங்களாக தந்தை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.