ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்
Recommended Video
காஞ்சிபுரம்: ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தனது பதவி விலகல் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில். 2009 ஆம் ஆண்டு, பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான செந்திலுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமம் ஆகும்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் கல்வி பயின்ற இவர், 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில், மாநில அளவில், முதல் நபராக தேர்ச்சி பெற்றவர். இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி கலெக்டராக பணியாற்றினார்.
எம்.எல்.ஏ.வாக இருந்தால் எங்களுக்கு என்ன..? ரூ.500 அபராதம் கட்டுங்க..!
சுரங்கதுறை இயக்குனர்
இதன் பிறகு ஷிமோகா மாவட்ட பஞ்சாயத்து, தலைமை செயல் அதிகாரியாக இருமுறை பணியாற்றினார். பின்னர் சித்ரதுர்கா மற்றும் ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் துறையின் இயக்குனராகவும் செந்தில் பணியாற்றினார்.
மக்கள் மத்தியில் புகழ்
2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் ஆட்சியராக (துணை ஆணையர் என்பது கர்நாடகாவில் மாவட்ட ஆட்சியர் பதவி ஆகும்) சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற நாள் முதலே, பொதுமக்கள் மத்தியிலும் பிற அதிகாரிகள் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றார், சசிகாந்த் செந்தில். இவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் நியாயமாகவும் பணியாற்றக் கூடியவர் என்று பலதரப்பட்ட மக்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்.
மக்கள் அதிர்ச்சி
இந்நிலையில் அண்மையில் துணை ஆணையர் பதவியிலிருந்து விலகுவதாக சசிகாந்த் செந்தில் அறிவித்தார். சசிகாந்த் செந்திலின் இந்த முடிவு அவரது சொந்த ஊர் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சசிகாந்துக்காக போராட்டம்
சசிகாந்த் செந்தில் ராஜினாமா முடிவை திரும்பப்பெற்று அவர் மீண்டும் பணியில் சேர வேண்டும் என வலியுறுத்தி சொந்த ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகாந்த் செந்தில், கிராமத்தில் அறிவுசார் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை அமைத்ததோடு ஏராளமான மாணவர்கள் கல்வி பெற உதவி உள்ளார். அவர் பணியாற்றிய எல்லா இடங்களிலும் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். எங்கள் மாணவர்களுக்கு செந்தில் தான் முன் மாதிரி. அவர் ராஜினாமா செய்யக்கூடாது, மீண்டும் பணியில் சேர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.