எங்கே போனாள் ஹரிணி?.. சமூக வலைதளங்கள் மூலம் அதி வேக தேடுதல்
காணாமல் போன ஹரிணி.. கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் என அறிவிப்புஹரிணியை கண்டுபிடித்து தந்தால் ரூ.1 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம்: ஹரிணி பாப்பா காணாமல் போய் ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், அவளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
உத்திரமேரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - காளியம்மா. இவர்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது 2 வயது குழந்தைதான் ஹரிணி. இவர்கள் சீப்பு, முத்துமணி, கண்ணாடி போன்ற பொருட்களை விற்கிறார்கள். அதனால் எங்கு திருவிழா நடந்தாலும் அங்கு சென்றுவிடுவார்கள்.
தங்கி விட்டார்கள்
அப்படித்தான் கடந்த 15-ம் தேதி தம்பதி இருவரும் கிழக்கு கடற்கரைச் சாலை இடைக்கழிநாடு பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு ஹரிணியை தூக்கி கொண்டு சென்றார்கள். வியாபாரத்தை முடித்துவிட்டு, ஊர் திரும்பினார்கள். ஆனால் இரவு லேட்டாகி விட்டதால், பவுஞ்சூர் என்ற பகுதியில் அப்படியே தங்கிவிட்டார்கள்.
தனிப்படை அமைப்பு
நடுராத்திரி கண்விழித்தபோதுதான் ஹரிணி காணாமல் போனது பெற்றோருக்கு தெரியவந்தது. எங்கெங்கோ அலைந்தார்கள்... தேடினார்கள்.. குழந்தை கிடைக்கவே இல்லை. அதனால் அணைக்கட்டு போலீசில் புகாரும் அளித்தனர். அவர்களும் குழந்தையை பற்றி விசாரித்து தேடி வருகிறார்கள். ஹரிணியை கண்டுபிடிக்க ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை மோசம்
குழந்தை காணாமல் போன நாளிலிருந்தே அம்மா காளியம்மா தண்ணி, சாப்பாடு இன்றி நிலைகுலைந்து போய் உள்ளார். இதனால் அவரது உடல்நிலையும் மோசமாகி வருகிறது.
ஒரு லட்சம் பரிசு
இந்த நிலையில் ஹரிணி காணாமல் போனது சமூக வலைதளங்களிலும் பரவியது. குழந்தையை கண்டுபிடிக்க ஏராளமான அமைப்பினர் முன் வந்துள்ளனர். முக்கியமாக, கரூரை சேர்ந்த இணைந்த கைககள் என்ற அமைப்பினர் நோட்டீஸ் அடித்து தேடி வருகிறார்கள். ஹரிணி படம் போட்டு, குழந்தையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்றும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சி
ட்விட்டர், பேஸ்புக், போன்ற சமூகவலைதளங்களிலும் குழந்தை பற்றின தகவலை அனுப்பி தேடி வருகிறார்கள். ஹரிணிக்காக இப்படி எல்லோருமே இணைந்து செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.