அத்திவரதர் தரிசனத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. தடுக்க ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!
Recommended Video
காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெறுகிறது. முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
கடந்த 19 நாட்களில் சுமார் 22 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். 20 ஆம் நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி, அத்திவரதர் காட்சியளிக்கிறார்.
இதனிடையே அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அத்திவரதரை தரிசிக்க வந்த 5 பேர் மரணமடைந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் ஆவர்.
இதன் காரணமாக முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவோர் கோவிலுக்கு வருவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.