அயோத்திக்கு விமானம் மூலம் காஞ்சியில் இருந்து புனித மண், செங்கற்கள்- சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர்
காஞ்சிபுரம்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்காக காஞ்சியில் இருந்து புனித மண் , செங்கற்கள் உள்ளிட்டவை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்க உள்ளார்.
ராமர் கோவில் பூமி பூஜை தொடர்பாக காஞ்சி சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காஞ்சி காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில். வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள புனித மண், பூஜை செய்யப்பட்ட செங்கற்கள், ராம நாம மந்திரம் எழுதிய வெள்ளி தாம்பாளம், தங்க, வெள்ளி நாணயங்கள், பூஜை பொருட்கள் ஆகியவை சங்கர மடம் சார்பில் விமானம் மூலமாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கும், அயோத்திக்கும் ஆன்மீக ரீதியாக நிறைய தொடர்பு உள்ளது. பல்வேறு ஆன்மீக முயற்சிகளுடன் ராமர் கோவில் பிரச்சனைக்கு சட்டத்தின் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை.. பிரதமர் கிளம்பி சென்ற பிறகு செல்வேன்- உமா பாரதி
இதுமட்டுமல்லாமல் சரித்திர சான்றுகளுடனும் தொல்பொருள் சான்றுகளுடனும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி கண்டு தற்போது அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற உள்ளது. அயோத்தி பிரச்சினை என்பது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கி தற்போது நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் நிறைவடைந்து பூமி பூஜை நடைபெற இருக்கிறது.
பூமி பூஜை நடைபெறும் அன்று பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரவர் இடத்தில் இருந்து தேச பக்தியுடன் தெய்வ பக்தியுடன் ராம மந்திரத்தை ஜபித்து பூமி பூஜையில் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு காஞ்சி சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.