காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம்... 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதரை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வழிபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் இன்று பத்தாவது நாளை எட்டியுள்ளது. இன்று, பால் வண்ணமும், ரோஸ் வண்ணமும் கலந்த பட்டாடையில் அத்திவரதர் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அத்திவரதரைக் காண பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு காத்துக் கிடக்கின்றனர். அத்திவரதர் உற்சவம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், அத்தி வரதர் வைபவம் துவங்கிய நாள் முதல், தரிசனம் தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், அத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், நாளை ஒருநாள் மட்டும் ஆனி கருட சேவையை முன்னிட்டு மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.