அணிலை பிடிக்கணும்.. டார்கெட் செய்யப்படும் செந்தில் பாலாஜி.. அடுத்த லெவலுக்கு போன பாஜக
காஞ்சிபுரம்: தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட அணில் தான் காரணம் என கூறிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், தமிழக அரசு அணிலை பத்திரமாக மீட்டு வனத்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது . இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் மின்தடைக்கு அணிலும் ஒரு காரணமாக விளங்குகிறது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மின்சாரம் தடை பட அணில் காரணம் என்று செந்தில் பாலாஜி சொன்னதை அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகின்றன.
தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம்.. 80 கோடி மக்களுக்கு பலன்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செந்தில் பாலாஜி
இதற்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.
அணில் காரணம்
அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம். பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்.
காஞ்சிபுரம்
இந்நிலையில் பாஜகவினர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் அதிசயம் குமார் தலைமையில் பாஜகவினர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனு ஒன்றை போட்டனர்.
பாஜகவின் செயல்
இம்மனுவில் , தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் அணில்கள் தான் என்று தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் .அதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படும் மின்வெட்டுக்கு காரணம் அணில்களாக தான் இருக்ககூடும் என்று தோன்றுகிறது. ஆகையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றித்திரியும் அணில்களை பிடித்து வனத்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாஜகவினரின் இச்செயல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.