காஞ்சிபுரம் ஏரிகள் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து அழியும் அபாயம்.. பொதுமக்கள் புகார்
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக, ஏரிகள் மாசுபட்டு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 912 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 1083 ஏரிகளும் உள்ளன. கடுமையான வறட்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் தொழிற்சாலைகள் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதளாளத்திற்கு சென்று விட்டது.
மதுராந்தகம் ஏரி, உத்திரமேரூர் ஏரி, தாமல் ஏரி உள்ளிட்டவை தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில், பட்டு சேலைகளுக்கு சாயம் போடுவதற்காக அரசு விதித்த தடையை மீறியும் முறைகேடாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சாயங்கள் போடப்பட்டு வருகின்றன.
இந்த சாய நீரும், கழிவு நீரும் கலந்து பாதாள சாக்கடையிலே வருவதால் காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் இருக்க கூடிய குடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரத்தை சுற்றிலும் இருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீராலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல கோடி ரூபாய் மதிப்புடைய சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி பல்லாண்டுகளாகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுத்திகரிப்பு தொட்டியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகியுள்ளதால், அப்படியே நத்தம்பேட்டை ஏரியில் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி பேசிய விவசாயிகள், மூன்று போகம் விளைந்த நிலங்களில் எல்லாம் தற்போது ஒரு போகம் கூட பயிர் செய்ய முடியவில்லை. விவசாயத்திற்கு இந்த தண்ணீரை பயன்படுத்தினால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் அரிப்பு உண்டாகி புண்கள் ஏற்படுகிறது. தொடர்ந்து உபயோகித்தால் பல கொடிய நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் விவசாயம் செய்ய தங்களால் இயலவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே மாசடைந்த ஏரிகளை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஏரிகளை சுத்தப்படுத்தினால் மட்டுமே நீர்நிலைகளை உயிர்ப்புடன் பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.