அத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா?.. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளி தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். அந்த வகையில் சயன கோலம் முடிந்து நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.
அத்திவரதர்
இந்த நிலையில் இந்த வைபவம் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்து வரும் 17-ஆம் தேதி அன்று மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார். இத்துடன் அத்திவரதர் அடுத்த 2059-ஆம் ஆண்டில் மீண்டும் வெளியே வருவார்.
45 லட்சத்துக்கும்
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதால் அத்திவரதரை காண லட்சக்கணக்கான கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை அத்திவரதரை 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில்
இந்த நிலையில் அத்திவரதர் தரிசனத்தை முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் என ஏராளமானோர் இன்னும் பார்க்கவில்லை என்பதாலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டு இந்த காட்சியை காண மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
ஆகம விதிப்படி
இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனியார் தமிழ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ஆகம விதிப்படி முன்பு என்ன நடந்ததோ அதுவே இப்போதும் தொடரும். எனவே அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படாது என்றார்.