திமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை
காஞ்சிபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் அத்திவரதரை தரிசிக்க வருவார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை என்று தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் அத்திவரதரை தரிசிக்க வருவார் என்று குறிப்பிட்ட அவர், ஸ்டாலின் வந்தால் வரவேற்பதாக கூறினார். அத்திவரதர் தமிழகத்தில் ஆன்மீக புரட்சி ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், வைகோவின் எதிர்மறை பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், சோமாலியா, நாகஷாகியுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதிமுகவினரின் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ககூடாது.. டிடிவி தினகரன் பிறப்பித்த ஷாக் உத்தரவு
வைகோ நினைப்பது போல் தமிழகம் எந்த அழிவுப்பாதையிலும் செல்லவில்லை, பாமர மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்களை வைகோ படித்து பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.