யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐநாவில் பேசிவிட்டு.. இந்தியாவில் வேற மாதிரி நடக்கிறீர்களே.. ஸ்டாலின்
காஞ்சிபுரம்: யாதும் ஊரே யாவரும் கேளீர் என ஐநாவில் பேசிவிட்டு இந்தியாவில் குடியுரிமை சட்டம் தேவையா என ஸ்டாலின் ஆவேசத்துடன் பேசினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், குடியுரிமை சட்டமா இல்லை. குழிப் பறிக்கும் சட்டமா? என இந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கினோம். அது உண்மைதானே, ஏதோ பழமொழி சொல்வார்களே, ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு. அது போல் உள்ளது குடியுரிமை திருத்த சட்டம்.
எந்தவித மாற்றம்
இஸ்லாமியர்களும், இலங்கை தமிழர்களும் என்ன தவறு செய்தார்கள். அவர்களுக்கு மட்டும் ஏன் குடியுரிமை வழங்கப்படாது? இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர்கள்தான் ஆள போகிறார்கள். அதில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் இந்திய மக்களை ஆள்கிறார்களா? மக்களுக்காக ஆட்சியை நடத்துகிறார்களா என்பதை பார்த்தால் இல்லை என்பதைதான் நாம் உணர முடிகிறது. இந்திய நாட்டை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
குடியுரிமை என்றால் என்ன? குடிமக்களின் உரிமைகளை பறிப்பதுதான் குடியுரிமையா? ஸ்டாலின் நறுக்
புதிய தொழிற்சாலைகள்
அப்படி கவலைப்பட்டிருந்தால் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்த்திருப்பார்கள். ஆனால் அதை செய்யவில்லை. நாட்டின் பொருளாரத்தை வளர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்றுமதியை பெருக்கியுள்ளனரா என்றால் அதுவும் இல்லை. புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளனவா, இல்லை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதா இல்லை. எதையும் செய்ய முடியவில்லை. எதையும் சொல்ல முடியாத கொடுமையான ஆட்சி நடைபெறுகிறது. மோடி அளித்த வாக்குறுதிகள் என்ன? படித்துவிட்டு வேலையில்லைாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார். அதை செய்தாரா?
குரல்வளை
விவசாயிகளின் வருமனத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார். இதையெல்லாம் செய்யவில்லை. நாட்டை குட்டிச்சுவராக்குவதை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரில் ஜனநாயகத்தின் குரல்வளையை அறுத்துள்ளார்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
குடிகளின் உரிமைகளை பாஜக ஆட்சி பறிக்கிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. இலங்கைத் தமிழர்களுக்கும் நாங்கள் எதிரி என பாஜக நிரூபித்துள்ளது. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என ஐநாவில் பிரதமர் பேசுகிறார் அப்படியானால் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேவையா? என்றார்.