இன்று யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள்; கட்சி தொடங்கியவுடன் ஆட்சி என்கிறார்கள் -ஸ்டாலின்
காஞ்சிபுரம்: இன்று யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள் என்றும் தொடங்கியவுடன் ஆட்சி என்கிறார்கள் எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை மனதில் கொண்டு அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
தனுஷ்கோடியை வாரி சுருட்டிய கடல் கொந்தளிப்பு.. இன்றுடன் 56 ஆண்டுகள் நிறைவு.. காட்சிகள் மாறாத சோகம்
கிராம சபைக்கூட்டம்
தமிழகம் முழுவதும் அதிமுகவை நிராகரிக்கிறோம் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு முதல்வர் பச்சைத் துரோகம் செய்து வருவதாக விமர்சித்தார். விவசாயிகளுக்கு இன்னல் விளைவிக்கும் புதிய வேளாண் சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக சாடினார்.
முதல்வர் மீது புகார்
டெல்லியில் கடந்த ஒரு மாதகாலமாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், அவர்களை இதுவரை பிரதமர் மோடி நேரில் சந்திக்காதது ஏன் என வினவினார். கிராமங்களும், விவசாயிகளும் இல்லாமல் நாடு இல்லை என்பதை உணரவேண்டும் எனத் தெரிவித்தார். நானும் ரவுடி நானும் ரவுடி என்பதை போல் நானும் விவசாயி என முதலமைச்சர் மார்தட்டிக் கொள்கிறாரே தவிர விவசாயிகளுக்காக அவர் எதையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.
சூசகமாக சாடல்
மேலும், திமுக 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1967-ம் ஆண்டு தான் ஆட்சியை பிடித்தது என்றும் இன்று யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள் என்றும் தொடங்கியவுடன் ஆட்சி என்கிறார்கள் எனவும் ஸ்டாலின் கூறினார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை மனதில் வைத்து ஸ்டாலின் இதனை சூசகமாக தெரிவித்தார்.
நீதிமன்றம் செல்வோம்
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக உறுதியாக நீதிமன்றத்தை நாடும் என அவர் எச்சரித்துள்ளார். அதிமுக அரசில் அறிவிப்புகளும் அடிக்கல் நாட்டு விழாக்களும் தான் நடைபெறுகிறதே தவிர திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்தார்.