புரட்டாசி முதல் சனி.. பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்.. விண்ணை பிளக்கும் கோவிந்தா கோஷம்
காஞ்சிபுரம்: புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமை என்பதால் அத்திவரதருக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் புதுவையில் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
Recommended Video
காலை 8 மணிக்கு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி என்பதால் சாரல் மழையில் நனைந்தபடியே பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பெருமாளை தரிசிக்க கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்த படி காத்திருக்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமிநாசினி மற்றும் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். கோவிலுக்குள், பூ, தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை மற்றும் முதியோர்க்கும் அனுமதி இல்லை. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 6 மாதங்களாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளதால் கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் வந்துள்ளனர்.
ராமன் லட்சுமணனுக்கு இருக்கும் புரிதல்...ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இருக்கிறது....ஆர் பி உதயகுமார் புகழாரம்!
வரதராஜ பெருமாள் கோயில்
கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கு பெயர் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 8 மணிக்கு கோவில் திறந்தவுடன் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு பிறகே பெருமாளை வழிபடுவது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் சனிக்கிழமை
புதுச்சேரியில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்கள் திறக்கப்பட்டும் கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. பக்தர்கள். சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆலயங்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலையிலேயே காந்திவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் வில்லியனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன.
கோயிலுக்குள்
கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
புரட்டாசி மாத சகஸ்ரநாமம்
இந்நிலையில் முதல் புரட்டாசி சனிக்கிழமையான இன்று திறக்கப்பட்ட கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இருந்தாலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீநித்யகல்யாணப்பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத சகஸ்ரநாமார்ச்சனை விழா கடந்த 17ம் தேதி துவங்கியது.
உற்சவர்
இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள் ஸ்ரீரங்கநாயகி தாயாருடன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கொரோனா அச்சத்தால் பக்தர்களுக்கு வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்து முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளை வழிபட்டனர்.