அத்தி வரதரை தரிசிக்க போலாந்து நாட்டினருக்கு அனுமதி மறுப்பு... கடும் கெடுபிடி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வந்த போலாந்து நாட்டினருக்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவத்தின், 7ஆம் நாளான இன்று, பெருமாளுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
விடுமுறை தினம் என்பதால், ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சுமார் 1,500 போலீசார், சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் கூட்ட நெரிசலில் மயங்கி விழுவோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், போலந்து நாட்டை சேர்ந்த 7 பேர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்துள்ளனர். அவர்கள் காவல்துறையின் அனுமதி பெற்ற பின்னர், கோயிலுக்குள் சென்றுள்ளனர். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், அத்தி வரதரை தரிசிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை என கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அத்திவரதரை தரிசிக்க வந்த போலாந்து நாட்டினர் 7 பேரும், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காஞ்சியில் அத்தி வரதர் வைபவம்... ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாகவே உள்ளனர். ஆனால், முறையான அறிவிப்பு இன்றி, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் பகதர்கள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.