கருப்பு உடை போலீஸ்.. பரபரக்கும் காஞ்சிபுரம்.. அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி, அமித் ஷா வருகை?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பற்ற அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வர உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது. அதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக ஆயுதம் தாங்கிய கருப்பு உடை போலீஸ் 40 பேர் காஞ்சிக்கு வந்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் மூலவரான அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நீருக்குள் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது. தினமும் அதிகாலையில் இருந்தே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள். இந்நிலையில அத்திவரதரை தரிசிக்க முக்கிய விஐபிக்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை விரைந்தது. இதன்படி ஆயுதம் தாங்கிய கருப்பு உடை போலீஸ் 40 பேர் காஞ்சிக்கு பாதுகாப்புக்காக வருகை தந்துள்ளார்கள். கிழக்கு கோபுரம் பகுதியில் 20 பேரும் மேற்கு கோபுரம் பகுதியில் 20 பேரும் உள்ளனர்
இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் வர உள்ளதாகவும் அதனால் தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் பரவி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்மாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை..