காஞ்சி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. பலத்த பாதுகாப்புக்கிடையே அத்திவரதரை தரிசித்தார்
காஞ்சிபுரம்: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து அத்திவரதரை தரிசித்தார்.
அத்திவரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் வரவேற்று கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.
அத்திவதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் வந்ததால் பக்தர்களுக்கு தரிசம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும், அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் சராசரியாக சுமார் 1 லட்சம் பேர் வரை வந்து அத்திவரதரை தரிசித்து விட்டு செல்கின்றனர். அத்திரவரதர் உற்சவம் தொடங்கி இன்றுடன் 12 நாட்கள் ஆகிறது. இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
அலைகடலென கூட்டம் திரள்வதை அடுத்து கோயிலை சுற்றி மற்றும் காஞ்சி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையேஅத்தி வரதரை தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காவி உடையில் காட்சியளித்த அத்தி வரதர்... தரிசனம் செய்தார் ஹெச். ராஜா
இந்நிலையில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 3 மணியளவில் அத்திவரதரை தரிசிக்க காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தடைந்தார். காவி உடையில் இன்று காட்சி தரும் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்தார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு காலை 10 மணி முதல் மேற்கு கோபுரம் வழியாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மாலை 5 மணிக்குப் பின்னர் தான் விஐபி தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் தரிசனத்திற்காக கிழக்கு கோபுர வாசல் 1 மணி வரை திறந்திருந்தது அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்னு அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி வருகையொட்டி 2 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்