3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்
ரவுடி கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்
காஞ்சிபுரம்: தன்னை போலீசில் பிடிச்சு கொடுத்த பொதுமக்களை.. 3 மாதம் கழித்து.. அரிவாளாலேயே வெட்டி உள்ளார் கஞ்சா வியாபாரி புருஷோத்தமன்.. இதில் ஒருவர் உயிரிழக்க.. 6 பேர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த கஞ்சாவுக்கு பெருமளவு ஆண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா போதையில் உள்ளவர்கள் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு, போலீசில் இது சம்பந்தமாக புகார் அளித்ததுடன், கஞ்சா வியாபாரியான அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரையும் பிடித்து ஒப்படைத்தனர்.
இதையடுத்து புருஷோத்தமன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முதல் வேலையாக, தன்னை பிடித்து போலீசில் கொடுத்த ஊர்மக்களை, கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கி உள்ளார்.
இன்று காலை கோவிந்தவாடி அகரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை புருஷோத்தமன் உள்ளிட்ட கும்பல் பட்டாக்கத்தியை வைத்து தாக்கி உள்ளது. கையில் கத்தியுடன் ரவுடிகள் ஆக்ரோஷமாக பாய்ந்து வருவதை பார்த்ததும், மக்கள் தலைதெறிக்க அலறி கொண்டு ஓடினார்கள். ஆனாலும் அவர்களை விரட்டிச் சென்று 7 பேரை இந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.
இதில் அதிகமாக வெட்டு விழுந்தது தனஞ்செழியன் என்பவருக்குதான். இவர்தான் ஊர்தலைவர். தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் தனஞ்செழியன் அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார். 2 பெண்கள் உட்பட 6 பேர் கத்திகுத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை அரிவாளால் தாக்கிய இந்த புருஷோத்தமன் அண்டு கோ தப்பி தலைமறைவாகிவிட்டது. தற்போது, பாலுச்செட்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அரிவாள் வெட்டு சம்பவத்தினால் கோவிந்தவாடி அகரம் பகுதியில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளதால், 100க்கும் மேற்பட்ட போலீசார் இப்போது குவிக்கப்பட்டுள்ளனர்.