ரஜினிக்கு தைரியம் கொடுக்கும் ஹெச் ராஜா.. கவலைப்பட தேவையில்லை என அதிரடி பேட்டி
காஞ்சிபுரம்: துக்ளக் விழாவில் ரஜினி பேசியதற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ரஜினி இது போன்ற புகார்களை கண்டு கவலைப்பட வேண்டாம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார்.
துக்ளக் பொன் விழா ஆண்டு விழா கடந்த ஜனவரி 14ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பொன்விழா மலரை குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட அதை ரஜினி காந்த் பெற்றுக்கொண்டார்.
செருப்புமாலை
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.
கலைஞர் பிரபலமாக்கினார்
இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று கூறியிருந்தார்.
கடும் எதிர்ப்பு
ரஜினியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெரியாரை அவதூறாக பேசியதாக, நடிகர் ரஜினிகாந்த் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் தனலட்சுமி தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குவியும் புகார்கள்
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து, வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தில் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இப்படி தமிழகம் முழுவதும் ரஜினிக்கு எதிராக 6 இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கவலைப்பட தேவையில்லை
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இந்த புகார்களை பற்றி ரஜினி கவலைப்பட தேவையில்லை என்றார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை. பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.