எம்.ஜி.ஆர். ஏன் திமுகவை விட்டு விலகினார் தெரியுமா...? ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..!
காஞ்சிபுரம்: வருமான வரித்துறையினரிடம் சிக்கிக்கொண்டதால் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு விலகியதாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அப்போதைய மத்திய அரசு (காங்கிரஸை சொல்கிறார்) திமுகவை உடைத்ததாகவும் பகிரங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறினார்.
காங்கிரஸ் அரசு
திமுகவை உடைக்க அப்போதைய மத்திய அரசு (காங்கிரஸ் அரசு) முயற்சி செய்ததாகவும், வருமான வரித்துறையினரிடம் எம்.ஜி.ஆர். சிக்கிக் கொண்டதால் வேறு வழியின்றி அவர் திமுகவை விட்டு விலக நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், யாரோ எழுதிக் கொண்டு வந்த புகார் கடிதத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டதாகவும் கூறியுள்ளார்.
புதிய விளக்கம்
இது நாள் வரை எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டார் இதன் காரணமாக அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்றும், அமைச்சரவையில் இருந்துகொண்டு அனுமதியின்றி நடிக்க சென்றதால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் அவர் அங்கிருந்து வெளியேறியதற்கான காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆர்.ஆர்.பாரதி புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
நல்லவர்கள் இல்லை
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சில் அப்போதைய மத்திய அரசான காங்கிரஸ் அரசையும் கடுமையாக சாடியிருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி உருவாகியுள்ள நிலையில் பாரதியின் இந்தப் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.