1 தரம்.. 2 தரம்.. 3 தரம் -ஆட்டுக் கிடாவை ஏலம் விட்ட ஸ்டாலின்.. ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்த MLA..!
காஞ்சிபுரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்டுக்கிடா ஒன்றை ஏலம் விடுத்த நிலையில் அதனை ரூ.5 லட்சம் கொடுத்து ஏலத்திற்கு எடுத்திருக்கிறார் தாம்பரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந்த ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், திமுக தேர்தல் நிதியாக காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது.
ஒப்புதல் கொடுத்த ஆளுநர்.. ஒன்றுபட்டு சாதித்த எடப்பாடி- ஸ்டாலின்.. சபாஷ்! இதுதான் எங்களுக்கு தேவை!
ஆட்டுக்கிடா பரிசு
திமுக முப்பெரும் விழாவை காணொலி மூலம் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் ஸ்டாலின், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு கட்சி தொண்டர் ஒருவர் ஆட்டுக்கிடா ஒன்றை பரிசாக அளித்திருந்தார். இதையடுத்து ஆட்டுக்கிடாவை நீங்கள் வீட்டுக்கு கொண்டுவரச் சொன்னாலும் சரி இல்லை ஏலம் விடுத்து தேர்தல் நிதி வசூலிக்கச் சொன்னாலும் சரி நான் செய்கிறேன் என டி.ஆர்.பாலு பேசினார்.
ஸ்டாலின் சிரிப்பு
டி.ஆர்.பாலு பேச்சைக் கேட்டு ஸ்டாலின் உள்ளிட்ட அங்கு கூடியிருந்த அனைவரும் சிரிப்பொலி எழுப்பினர். இல்லை இல்லை வீட்டுக்கெல்லாம் கொண்டு வர வேண்டாம், அதை இப்போதே ஏலம் விடுத்து அதன் மூலம் வரும் தொகையை தேர்தல் நிதியில் சேர்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார் ஸ்டாலின். பின்னர் ஆட்டுக்கிடாவுக்கான ஏலத்தையும் அவரே தொடங்கி வைத்தார்.
ரூ.5 லட்சம்
ஆட்டுக்கிடாவின் விலை ஒரு லட்ச ரூபாய் என ஸ்டாலின் ஏலத்தை தொடங்கி வைத்தார். உடனே காஞ்சிபுரம் சுந்தர் என்பவர் அதை வாங்கிக் கொள்வதாக கையை உயர்த்தினார். அவருக்கு போட்டியாக ஏலம் கேட்ட திமுக எம்.எல்.ஏ.வும், தாம்பரம் நகரச் செயலாளருமான எஸ்.ஆர். ராஜா 5 லட்ச ரூபாய் என ஏலம் கேட்டார். இதையடுத்து அதனை மீறி யாரும் கேட்காததால் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் எனக் கூறி ஏலத்தை முடித்து வைத்தார் ஸ்டாலின்.
முதல் தவணை
இதனிடையே திமுக தேர்தல் நிதியாக காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் தரப்பட்டது. இதனை முதல் தவணையாக தாம் எடுத்துக்கொள்வதாகவும் இன்னும் கூடுதல் நிதி தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஸ்டாலின் பேசினார். திமுகவில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதி கணக்கு தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.