காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சுவாமியுடன் தமிழக பாஜக தலைவர் முருகன் சந்திப்பு
காஞ்சிபுரம்: பாஜக தலைவர் எல் முருகன் இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழகத்தில் 2014ம் ஆண்டு முதல் பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்திரராஜன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த 7 மாதங்களாக பாஜக தலைவர்களாக யார் யார் யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஊடங்களில் பலத்த விவாதங்கள் நடந்தது.
இதேபோல் தமிழக பாஜகவில் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, சீனிவாசன், வானதி சீனிவாசன், நாயினார் நாகேந்திரன் என பலரது பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிபட்டது. ஆனால் யாருக்கும் தேசிய தலைமை வாய்ப்புகள் தரவில்லை.
தமிழகத்தின் திராவிட சித்தாந்த அரசியலுக்கு பதிலடியாக முற்றிலும் புதுமுகமாக ஒரு ஆளை இந்த முறை நியமிக்க வேண்டும் என்று பாஜக தலைமை நினைத்திருந்தாக தெரிகிறது. அதன்படி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல் முருகனை திடீரென தமிழக பாஜக தலைவராக அறிவித்து தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டார்.
இதை பாஜகவினர் உள்பட யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக பார்க்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த எல் முருகன் வரும் சட்டசபை தேர்தல் மற்றும் தமிழக அரசியல் களத்தில் பாஜகவுக்காக சிறப்பாக செயல்படுவார் எனறு நம்பிக்கை வைத்துள்ள பாஜக தேசிய தலைமை அவருக்கு தலைவர் பதவியை அளித்துள்ளது.
இதையடுத்து தமிழக பாஜக நிர்வாகிகள் முருகனுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜக தலைவர் பதவி ஏற்ற எல் முருகன், இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தார். அங்கு மடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சுவாமிகளை சந்த்து ஆசி பெற்றார். இந்த புகைப்டங்கள் வெளியாகி உள்ளது.