அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் வரவேற்பீர்களா.. தமிழிசை கலகல பதில்
காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருகை தந்தால் அவரை நிச்சயம் நான் வரவேற்பேன் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கியது. அப்போது முக்கிய பிரமுகர்கள் விஐபி தரிசனத்தில் சென்று அருளாளர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். இதை காண தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் காஞ்சிபுரம் வந்தார். ஏற்கெனவே சயனகோலத்தில் இருந்த வரதரை தரிசித்த இவர் 35-ஆம் நாள் வைபவமான இன்று நின்ற கோலத்தில் இருந்த பெருமாளையும் தரிசனம் செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டும்.
அவ்வாறு வந்தால் அவரை நிச்சயம் நான் வரவேற்பேன். அவரது குடும்பத்தினர், கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது ஒவ்வொருவராக வந்த வண்ணம் உள்ளனர். முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமல் கோயில்களுக்கு வருவர். ஆனால் இப்போது எந்தவித ஒளிவுமறைவின்றி அவர்கள் வருவதை நான் வரவேற்கிறேன் என்றார்.