கிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை
செங்கல்பட்டு: தென்சென்னை தொகுதிகுட்பட்ட புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
மத்திய அரசின் முன்மாதிரி கிராம வளர்ச்சித் திட்டத்தின் (SAGY) கீழ் இந்த கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார் அவர்.
இதற்கான விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் கிராமமக்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் கிராம மேம்பாடு தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன் மாதிரி கிராமம்
கடந்த 2014-ம் ஆண்டு முன்மாதிரி கிராம வளர்ச்சித் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதை மத்திய ஊரக வளர்ச்சித்துறை நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் எம்.பி.க்கள் ஆண்டுக்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். மேலும், உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
மாநிலம்
மக்களவை உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே கிராமத்தை தத்தெடுக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் கூட கிராமத்தை தத்தெடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு கிராமம் வீதம் சுமார் 5 கிராமங்களை பதவிக்காலத்திற்குள் எம்.பி.க்கள் தத்தெடுக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் இலக்கு.
தத்தெடுப்பு
அதன்படி தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தனது தொகுதிகுட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் சித்தாலப்பாக்கம் கிராமத்தை இன்று தத்தெடுத்தார். அதற்கான விழா இன்று நடைபெற்ற நிலையில், சித்தாலப்பாக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மக்களிடம் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
வெளிகிணறு
சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்கு புதிதாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், வெளிகிணறும் அமைத்துக்கொடுக்குமாறு கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்ற தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அவை இரண்டையும் உடனடியாக அமைத்துக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைக்கேட்ட கிராமமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.