விஷமிகள் வெறிச்செயல்- காஞ்சிபுரம் அருகே தந்தை பெரியார் சிலை உடைப்பு- மு.க.ஸ்டாலின், தினகரன் கண்டனம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் நடத்திய 1971-ம் ஆண்டு சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலம் குறித்து ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையானது. அந்த ஊர்வலத்தில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்துவரப்பட்டது என்பது ரஜினிகாந்தின் பேச்சு.
ஆனால் ராமர் சிலை நிர்வாணமாக கொண்டுவரப்படவில்லை; பெரியார் வாகனம் மீது செருப்பு வீசப்பட்டதற்கு எதிர்வினையாகவே ராமர் படம் செருப்பால் அடிக்கப்பட்டது என பெரியார் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் ரஜினிகாந்த், உண்மையை திரித்து கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ரஜினிக்கு எதிரான போராட்டங்கள்
ரஜினிகாந்தோ, தாம் பேசியது உண்மைதான்; மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. ரஜினிகாந்தின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. ரஜினிகாந்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
உயர்நீதிமன்றம் வழக்கு வாபஸ்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 15 நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்; பின்னர் மாஜிஸ்திரேட்டை நீதிமன்றத்தை முதலில் அணுக வேண்டும் என கூறியது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் வழக்கை தாக்கல் செய்த திராவிடர் விடுதலை கழகத்தினர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
தந்தை பெரியார் சிலை உடைப்பு
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 50 ஆண்டுகளாக இருந்து வரும் சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள் துண்டித்து சேதப்படுத்தினர். விஷமிகளின் இச்செயலைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், இயக்கத்தினர் அங்கு போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
இதனிடையே தந்தை பெரியார் சிலை உடைப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து ஸ்டாலிடனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றார்.
தேவை நடவடிக்கை
மேலும் 95 வயது வரை இந்த தமிழினத்துக்காக பாடுபட்ட தலைவர் தந்தை பெரியார். அவரது சிலையை சேதப்படுத்துவது என்பது வேதனைக்குரியது. கடும் கண்டனத்துக்குரியது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினகரன் எச்சரிக்கை
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கலியப்பேட்டை எனுமிடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில், சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சமீப காலமாக அரங்கேறி வரும் இத்தகைய நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
டிஜிபி திரிபாதி வார்னிங்
இந்நிலையில் தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகளை உடைக்கும் சமூக விரோதிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி திரிபாதி விடுத்துள்ள எச்சரிக்கையில், தலைவர்களின் சிலைகளை உடைக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.