காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் 21 வயது மகன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலை உயர்ந்த பல்சர் பைக்கை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பினார்கள். .பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி சாம்சன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி பெயர் ரோசி
இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள். மூத்தமகன் எலியா தனியார் கம்பெனியில் பணி புரிகின்றார். இரண்டாவது மகன் எலிசா (வயது 21) பிளஸ்-2 முடித்துவிட்டு சர்ச்சுகளில் பாடல் பாடும் பாடகராக உள்ளார். மூன்றாவது மகன் எட்வின் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகின்றார்.
பிறந்தநாள் விழா
இரண்டாவது மகன் எலிசா செம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் ராமு என்பவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக தன்னுடைய பல்சர் வண்டியை எடுத்துக்கொண்டு ராமுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரும்பு ராடால் தாக்குதல்
பிறந்தநாள் விழாவை முடித்துக்கொண்டு ராமுவின் தம்பி லட்சுமணனை பைக்கில் அழைத்துக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டு விட்டு தன்னுடைய வீட்டுக்கு சிறுகாவேரிப்பாக்கம் பிடிஓ அலுவலகம் பின்புறம் வழியாக வரும்போது குட்டை தெரு என்ற இடத்தில் எலிசாவின் வண்டியை 3 மர்ம நபர்கள் மடக்கி கையில் வைத்திருந்த இரும்பு ராடால் தாறுமாறாக தாக்கி கொலை செய்துவிட்டு பல்சர் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பினர்.
உடலை கைப்பற்றிய போலீசார்
தகவலறிந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
எந்த பழக்கமும் இல்லை
எலிசா அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் என்றும் யாரிடமும் வம்பு தும்புக்கும் போகாதவர் என்றும் மதுபானம் போன்ற பழக்க வழக்கங்கள் இல்லாதவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் டீக்கடை வைத்துள்ள வேலு என்பவரின் மகன் தாமோதரன் கொஞ்சம் காலமாக ரவுடிசம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவரும் இவருடைய நண்பர்களும் சேர்ந்து கொலை செய்திருக்க வாய்ப்பு உண்டு என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். சந்தேகத்தின் பெயரில் வேலுவையும் தாமோதரனின் அண்ணன் சேகர் என்பவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.