அத்தி வரதரை தரிசிக்க பிரதமர் மோடி வருகிறாரா... எப்போதும் இல்லாத பக்தர்கள் கூட்டம்
Recommended Video
காஞ்சிபுரம்: இன்று முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதரை தரிசிக்க, பிரதமர் மோடி வருகிறார் என தகவல் பரவியதால், பக்தர்களின் கூட்டம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை அத்தி வரதர் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
நேற்று வரை அத்தி வரதரை சயனகோலத்தில் பக்தர்கள் தரிசித்து வந்த நிலையில், இன்று அத்திவரதரை நின்ற கோலத்திற்கு ஆகம விதிப்படி மாற்றியமைக்கப்பட்டது. இன்று காலை 5.25 மணிமுதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
மேலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து எப்போதும் இல்லாத அளவு மக்கள் கூட்டம் சற்று குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில், இன்று அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி வர இருக்கிறார். அதனால் போலீசாரின் கெடுபிடிகள் அதிமாக இருக்கும். மேலும், நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண மக்கள் கூட்டம் அலைமோதும் என தகவல் பரவியது. இதன் காரணமாகவே கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.