ஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரத்திற்கு வந்த சோதனை.. வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் ஏரிகள் அனைத்துமே முற்றிலும் காய்ந்து விட்டதால், வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தில் உள்ள 14,000 ஏரிகளில் 10,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் மட்டுமின்றி அடிப்படை மற்றும் குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் இன்றி பொதுமக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏரிகளின் மாவட்டம் என்று பெருமையாக அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறிதும், பெரிதுமாக சுமார் 1,900 ஏரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மதுராந்தகம் மற்றும் செய்யூர் உள்ளிட்ட 5 ஏரிகளில் மட்டும் சிறிதளவு நீர் தேங்கியுள்ளது.
இந்த நீரும் இன்னும் சில தினங்களுக்கு தான் இருக்கும். பிறகு வற்றி விடும் என அப்பகுதி சமூக ஆர்லவர்கள் கூறியுள்ளனர். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
புஸ்ஸுன்னு போன வெறும் "வாயு".. இந்த 4 மாவட்டத்தில் மட்டும் செம மழை இருக்கு!
வறட்சி குறித்து பேசிய விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 1900 ஏரிகளில், 902 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த ஏரிகள் அனைத்திலுமே குறிப்பிடத்தகுந்த அளவு தண்ணீர் இல்லை முற்றிலும் வறண்டு தான் காணப்படுகிறது
இதனால் இம்மாவட்ட விவசாயிகள், மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே காஞ்சிபுரத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25,000, கரும்பு பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.60,000, வேர்கடலை மற்றும் காய்கறிகள் பயிர் செய்தவர்களுக்கும் தகுந்த நிவாரணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
மேலும் பேசிய விவசாயிகள் பயிர் காப்பீட்டு நிறுவனமும், விவசாய துறையும் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டன. ஆய்வின் முடிவில் பயிர்கள் முற்றிலும் காய்ந்து போய்விட்டன என தெரிந்தும் கூட, காப்பீட்டு தொகை வழங்க அவை தயாரக இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். கொளுத்தும் கோடை வெயிலால் வறண்டு கிடக்கும் ஏரிகளை தற்போதே உரிய முறையில் தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்லவர்கள் இந்த கொடும் வறட்சி பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க தவறினால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும் என கவலை தெரிவித்துள்ளனர்.