பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட பூமி பூஜை... விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே மூன்று தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. வேகவதி ஆறு கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்ட நிலையில் பாலாறும், செய்யாறும் விவசாயத்துக்கான முக்கிய ஆதரங்களாக உள்ளன.
மாவட்டத்தில் விவசாயம் செழிக்க இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், செங்கல்பட்டை அடுத்த ஈசூர்-வள்ளிபுரம் பாலாற்றின் குறுக்கே மூன்று தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாயலூர், உள்ளாவூர் தடுப்பணை கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டு டெண்டர் விடும் சூழலில் உள்ளதாக தெரிவித்தார்.