தமிழகத்தில் அடுத்தது பாஜகவின் கூட்டணி ஆட்சிதான்... சிரிக்காமல் அடித்து சொல்லும் பொன்னார்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சியே அடுத்து அமையும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக வேண்டா வெறுப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. பாஜகவின் நிர்பந்தத்தால் அக்கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டது.
ஆனால் தேர்தல் நேரத்தில் பாஜகவை கழற்றிவிட்டே அதிமுக பிரசாரங்களை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆளும் அதிமுக அரசை பாஜக கடுமையாக அண்மைக்காலமாக விமர்சித்து வருகிறது. இதனால் பாஜக- அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது.
தமிழக பாஜகவை பொறுத்தவரையில் 2021தான் முக்கியம். இதனை கவனத்தில் வைத்துதான் எங்களது நடவடிக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கானவே நாங்களும் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் 2021 தேர்தலுக்குப் பின்னர் பாஜக இடம்பெறக் கூடிய ஆட்சிதான் தமிழகத்தில் அமையும். இதனைத்தான் தமிழக மக்களுமே விரும்புகின்றனர்.
இந்த இலக்கை எட்டும் வகையில் எங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். சி.ஏ.ஏ என்பது தேசத்தில் வாழும் குடிமக்களை வெளியேற்றக் கூடிய சட்ட திருத்தமே அல்ல. இதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுல் இருக்கிறார்.
நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழக் கூடாது என திமுக நினைக்கிறது. 2021 சட்டசபை தேர்தலுக்காக நாட்டு மக்களை திமுக முட்டாளாக்கி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
இந்துஸ்தானையும் சிரித்துக் கொண்டே பெறுவோம் என்று அன்று ஜின்னா கூறினார். ஜின்னா கூறியதையே இன்று ஸ்டாலின் செயல்படுத்துகிறார். பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை இங்கு குடியேற வைக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.