டி.என்.பி.எஸ்.சி.விவகாரம்... திடுக்கிடும் தகவல் வெளியே வரும்... தினகரன் எச்சரிக்கை
காஞ்சிபுரம்: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
அமைச்சராக இருப்பதால் எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என நினைத்து ராஜேந்திரபாலாஜி பேசி வருவதாகவும், அவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.காஞ்சிபுரத்தில் அமமுக நிர்வாகி இல்ல மணவிழாவில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தை முறையாக விசாரணை நடத்தினால் அதில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற முழு உண்மை வெளியாகும் எனக் கூறினார்.
சசிகலா விடுதலை தொடர்பாக தனக்கு ஜோசியம் கூறத் தெரியாது என்றும், சட்டப்பூர்வமாக முயற்சிகள் நடந்து வருவதால் நிச்சயம் சசிகலா விரைவில் விடுதலையாவார் எனவும் கூறினார். சசிகலா விடுதலைக்கு பின் அதிமுகவில் தாக்கம் ஏற்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தாக்கம் ஏற்படுமா, ஏற்படாதா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் என பதிலுக்கு திருப்பிக் கூறினார். மேலும், சசிகலா விடுதலை தொடர்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, வழக்கத்திற்கு மாறாக சொதப்பலான பதிலை அளித்தார். மக்களுக்கு நல்லது நடக்கிறதா எனப் பார்ப்போம் என்பதோடு முடித்துக்கொண்டார். எப்போதும் தனது கருத்தை ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக கூறும் தினகரன், அண்மைக்காலமாக மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை குறைத்து வருவது கவனிக்கத்தக்கது.