உத்தரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் தங்க குவியல்.. வருவாய் துறையிடம் ஒப்படைக்க மறுக்கும் கிராமம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பழங்கால கோயிலில் தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்தில் நகைகளை ஒப்படைக்க கோட்டாட்சியர் வித்யா கெடு விதித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ளது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த குழம்பேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய நகர மக்கள் திருப்பணி மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திருக்கோயிலை புனரமைக்கும் போது குவியல் குவியலாக தங்கம் கிடைத்துள்ளது. சுமார் 561 கிராம் எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளது. அதாவது அரை கிலோவுக்கும் அதிகமாக உள்ளது.
கிராம மக்கள்
இந்த தங்கத்தை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்க முடியாது என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த நகைகளை புதிய கோயிலுக்கு அடியில் பத்திரமாக வைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
மறுக்கும் கிராமம்
இதை அறிந்த வருவாய் துறை அந்த நகைகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் கிராம மக்கள் ஒப்படைக்க மறுத்துள்ளனர். இதையடுத்து போலீஸார், வருவாய்த் துறையினர் என கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோட்டாட்சியர் வித்யா
இதையடுத்து கோட்டாட்சியர் வித்யாவும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் கிடைத்த ஆபரணங்களை இன்னும் ஒரு மணி நேரத்தில் அரசிடம் ஒப்படைக்குமாறு கெடு விதித்துள்ளார். எனினும் அந்த நகைகளை தர முடியாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
கோயிலுக்கு சொந்தம்
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில் பொதுவாக கோயிலில் கிடைக்கும் புதையல்கள் அந்த கோயிலுக்கே சொந்தம். அதை கோயில் நிர்வாகம் பத்திரமாக வைத்துக் கொள்வார்களேயானால் அவர்களிடம் ஒப்படைப்பதில் தவறில்லை என்கிறார்கள்.