தமிழகத்தில் 18+ அனைவருக்கும்..தடுப்பூசி பணிகளில் சில தினங்களில் தொடங்கும்..அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் இரு தினங்களில் தொடங்கும் என்று தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆட்டோ ஓட்டுநர்கள், ஆலைத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும் என்றும் குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள்
பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ஆக்சிஜன் படுக்கை பிரிவைப் பார்வையிட்டார். அப்போது ஆக்ஸிஜன் இருப்பு நிலவரத்தையும் அவர் கேட்டறிந்தார்.
சில தினங்களில் தொடக்கம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி இரு தினங்களில் தொடங்கும். அதில் ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், ஆலைத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தமிழக முதலமைச்சர் இன்னும் சில நாட்களில் துவக்கி வைப்பார்.
தடுப்பூசி கையிருப்பு
இதுவரை மாநிலத்தில் 70 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாநிலத்தில் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. விரைவில் மாநிலத்தில் 18 வயதுக்குக் குறைவானவர்கள் தவிர அனைவரும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். தமிழகத்தில் கண்டிப்பாக 100% அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
மேலும் உலகளாவிய ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் 2 மாதத்தில் தமிழகம் வந்துவிடும். கடந்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் 2000 மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 2000 தொழில்நுட்ப பணியாளர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறைவு
தமிழகத்தைப் பொருத்தவரை முழு ஊரடங்கால் கடந்த இரு நாட்களாகத் தொற்று குறைந்துள்ளது. விரைவில் நோய்த் தொற்று முழுமையாகக் குறையும். காஞ்சிபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் கட்டிடத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் உதவியுடன் புதிதாக 100 படுக்கைகள் கொண்ட தயாராகி பயன்பாட்டிற்கு வரும்" என்று அவர் தெரிவித்தார்.