பெட்ரோலுடன் தண்ணீரை கலந்த பங்க் ஊழியர்கள்? நடுவழியில் நின்ற வாகனங்கள்.. உரிமையாளர்கள் வாக்குவாதம்
செங்கல்பட்டு: எத்தனால் கலந்த பெட்ரோலுடன் தண்ணீர் கலந்ததால் நடு வழியில் வாகனங்கள் நின்றதையடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாகன உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலில் 10% எத்தனாலை கலக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
மேலும், பெட்ரோல் டேங்கில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் எத்தனால் கலந்த பெட்ரோலுடன் தண்ணீர் மிக்ஸ் ஆகி விடும் அபாயம் இருப்பதாகவும் பெட்ரோலியத்துறை சார்பில் பொதுமக்களுக்கும், பெட்ரோல் பங்க் நடத்துபவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோலிய பங்கில் நேற்றிரவு ஒருவர் 1000-ரூபாய்க்கு தனது காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது, சுமார் 1 கிலோ மீட்டர் மட்டுமே சென்றவுடன் கார் நின்று விட்டது. இவரைப் போலவே மற்றொருவருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளார். இருப்பினும் இதற்கு அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.
அரூர் சாலை விபத்து... பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு... முதல்வர் உத்தரவு
இந்த பிரச்சனை தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகியிடம் கேட்டபோது, தற்போது வரும் பெட்ரோலில் எத்தனால் கலந்து வருவதால் வாகனத்தைக் கழுவும் போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் படாமல் கழுவ வேண்டும் எனவும், அப்படித் தவறுதலாகத் தண்ணீர் பட்டால் இதுபோன்று வாகனங்கள் பாதி வழியிலேயே நின்று விடும் எனத் தெரிவித்தார். மேலும், தங்களிடம் உள்ள பெட்ரோலை பரிசோதனை செய்து விட்டதாகவும், அதில் தண்ணீர் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து பொட்ரோலிய துறை அதிகாரிகள் பெட்ரோல் பங்கில் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை பெட்ரோல், டீசலை விற்கவும் தடை விதித்தனர்.