கல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம் வேறு.. ஷாக்!
இளம்பெண் மர்ம மரணம் குறித்து விசாரணை கோரப்பட்டுள்ளது
காஞ்சிபுரம்: கல்யாணம் ஆகி 2 மாசம்தான்.. புதுப்பெண் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. ஆனால் அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்ய, அப்பெண்ணின் பெற்றோரே ஏற்பாடு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை.. 23 வயது பெண்.. 2 மாதத்துக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடந்தது. வீட்டில் பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து இந்த கல்யாணத்தை செய்து வைத்தனர்.
இந்நிலையில் இன்று உத்தரமேரூரில் உள்ள தனது அம்மா வீட்டில் செந்தாமரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டதை குறித்து பெற்றோர் போலீசில் எந்த தகவலையும் சொல்லவில்லை.. புகாரும் தெரிவிக்கவில்லை.. யாருக்கும் தெரியாமல் உடலை ரகசியமாக புதைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த விஷயம் எப்படியோ போலீசாரின் காதுகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து செந்தாமரையின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இதற்கு பிறகுதான் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.
இதை கேட்டு பதறி கொண்டு வந்த செந்தாமரையின் உறவினர்கள், சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசில் புகார் தந்துள்ளனர்.. 2 மாசத்தில் செந்தாமரை இறந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணையும் ஆரம்பமானது. செந்தாமரை இறந்தது தன்னுடைய அம்மா வீடு என்பதாலும், இறந்த சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகமும் எழுந்தது.
10 நாடுகள்.. மொத்தமாக கொரோனாவிலிருந்து விடுதலை.. முழு விவரம்!
இதையடுத்துதான் விஷயம் வெளியே வந்தது.. கல்யாணத்துக்கு முன்பு செந்தாமரை வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாகவும் அந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதன்பிறகே மகளை சமாதானம் செய்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்யாணம் ஆனதில் இருந்தே செந்தாமரை மனமுடைந்து சோகத்துடன் காணப்பட்டு வந்தாராம்.. மேலும் சுதந்திரமாக வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த செந்தாமரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், இது கொலையா? தற்கொலையா? என்று தெரிய வரும் என்கிறார்கள் போலீசார்.