சாப்பிடுங்கய்யா.. வயிறார சாப்பிடுங்க.. ஏதோ எங்களால முடிஞ்சது.. அகரம்தூளி கிராமத்தில் ஒரு மாற்றம்!
குளத்தை தூர் வாரிய இளைஞர்களுக்கு கிராம மக்கள் உணவளிக்கின்றனர்
Recommended Video
காஞ்சிபுரம்: "பசங்க ஏதோ விளையாட்டா செய்யறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி எங்களுக்கு உதவி செய்வாங்கன்னு நாங்க நினைக்கவே இல்லை" என்று உணர்ச்சி பெருக்குடன் சொல்கிறார்கள் அகரம்தூளி கிராமத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளதுதான் இந்த அகரம்தூளி கிராமம். இங்குள்ள நைனார் குளம் சுற்றுவட்டாரத்தில் ரொம்பவும் ஃபேமஸ்.
இந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த குளத்தின் நீரைத்தான் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இது இப்போது மட்டும் இல்லை, ஐந்து தலைமுறைகளாவே இந்த குளம்தான் இவர்களுக்கு குடிநீர் ஆதாரம்.
மாணவர்கள்
இந்தநிலையில், மழை இல்லாமல் இந்த குளம் வற்ற துவங்கிவிட்டது. அதனால் வறண்டு போன குளத்தில், சில இளைஞர்கள் வந்து தினமும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதை அந்த கிராம மக்களும் பார்த்து கொண்டே செல்வார்கள்.
Video: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்
தூர் வாரினர்
என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.. விளையாடி கொண்டிருந்த இந்த இளைஞர்கள் திடீரென்று குளத்தை தூர் வார ஆரம்பித்து விட்டனர். காலைல ஸ்கூல், காலேஜ்-க்கு போய்விட்டு மாலையில் வரும் இவர்கள், ஆளுக்கு ஒரு மண்வெட்டியை எடுத்து கொண்டு குளத்தை சுத்தப்படுத்தினர்.
விடாமுயற்சி
காலேஜ்-க்கு லீவு என்றாலும் இந்த வேலையில்தான் இறங்கி விடுகிறார்கள். இதை பார்த்த மக்களும், பிள்ளைகள் ஏதோ விளையாட்டாக செய்கிறார்கள் என்றுதான் நினைத்தனர். அதனால் ஆரம்பத்தில் இவர்களது செயல்பாட்டை கண்டுகொள்ளவே இல்லை. பிறகுதான், இளைஞர்களின் துணிவையும், விடாமுயற்சியையும், பொறுப்புணர்வையும் கண்டு ஆச்சயரிப்பட்டு போய்விட்டார்கள்.
சாப்பாடு
இந்த பிள்ளைகளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றுகூட அவர்களுக்கு புரியவில்லை. அதனால் கிராம மக்கள், அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர், ஜூஸ் என என்ன முடியுமோ அதை கொடுத்து தினமும் பாராட்டி வருகின்றனர்.
விவசாயி
என்னப்பா, இப்படி திடீர்னு கலக்கறீங்களே என்று கேட்டால், "நாங்கள் கிரிக்கெட் விளையாடிட்டுதான் இருந்தோம். வேணுஅரசு என்ற விவசாயிதான் எங்களுக்கு இந்த குளத்தை தூர்வார ஐடியா தந்தார். அவர் சொன்ன பிறகுதான் எல்லோரும் கூடிப்பேசி இப்படி ஒரு முடிவு எடுத்துட்டோம். எங்களை மாதிரியே மற்ற இளைஞர்களும், அவங்கவங்க கிராமத்தில் உள்ள குளம், குட்டைகளை தூர் வாரினால் நல்லா இருக்கும்" என்று இளைஞர்கள் கோரஸாக கோரிக்கை விடுக்கிறார்கள்.