குமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தில் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய 4 சிறுவர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயமான நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாயமான மேலும் இரண்டு சிறுவர்களை தேடும் பணியில் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய ரெக்சின்(11), சகாயரெகின் (12), ரெஜித் (12), சச்சின்(14) ஆகிய சிறுவர்கள் 4 பேர் கடற்கரை பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கடலில் விழுந்துள்ளது.
இதை எடுப்பதற்கு நால்வரும் கடலுக்குள் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் எழுந்த ராட்சத அலை இந்த நான்கு பேரையும் அடித்து இழுத்து சென்றது சிறுவர்களின் அலறல் சப்தத்தை கேட்ட மீனவர்கள் சிலர் உடனடியாக கடலுக்குள் குதித்து அவர்களை மீட்க முயன்று சச்சின் என்பவரை சடலமாக மீட்டனர்.
ஆரோக்கிய ரெக்சினை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சகாயரெகின் மற்றும் ரெஜித் ஆகிய இருவர் கடலில் மாயமான நிலையில் இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த சென்ற குளச்சல் கடலோர காவல் படையினர் மீனவர்கள் உதவியுடன் படகுகள் மூலம் கடலுக்கு சென்று தீவிரமாக மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர் மாயமான இரண்டு சிறுவர்களின் உறவினர்களும் கடற்கரையிலேயே அமர்ந்து கதறி அழுது வருகின்றனர் இச்சம்பவம் புதூர் மீனவ கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.