மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் சாப்பாடு சரியில்லை.. மயங்கி விழுந்த மாணவிகள்
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்தில்
சாப்பாடு சாப்பிட்ட 6 மாணவிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த 6 பேரும், மருத்துவ கல்லூரியில் ஆய்வக தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகள் ஆவர். இன்று காலை உணவு சாப்பிட்ட பிறகு இந்த சம்பவம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வரும் இந்த கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த பரிசோதகர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று கல்லூரியில் ஆய்வக தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளில் சிலர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவர்களுக்கான உணவகத்தில் உணவு சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 6 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
இதனை பார்த்த சக மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிட்ட மாணவிகள் மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.