ரஷ்யா: கப்பல் தீப்பிடித்து 6 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி.. தமிழக மாலுமி உள்பட 6 பேர் மாயம்
கன்னியாகுமரி: ரஷ்ய கடல் பகுதியில் கெர்ச் ஸ்ட்ரெய்ட் கப்பலில் நடந்த விபத்தில் இந்தியர்கள் 6 பேர் இறந்துவிட்டனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மாலுமி உள்பட 6 பேர் மாயமாகிவிட்டனர். இதனால் உறவினர்கள் கலக்கம் அடைந்தனர்.
ரஷ்யா-கிரிமியா இடையே உள்ள கெர்ச் வளைகுடா பகுதியில் 21-ஆம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த இரு கப்பல்களும் தான்சானியா நாட்டைச் சேர்ந்தவை. கேண்டி என்ற கப்பலில் 9 துருக்கியர்கள், 8 இந்தியர்கள் என 17 ஊழியர்கள் இருந்தனர். மற்றொரு கப்பலான மேஸ்ட்ரோவில் துருக்கியை சேர்ந்த 7 பேர், இந்தியர்கள் 7 பேர், லிபியாவை சேர்ந்த ஒருவர் என 15 பேர் இருந்தனர்.
எரிவாயு மாற்றம்
ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு இருந்தது. மற்றொரு கப்பலில் டேங்கர் இருந்தது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலில் உள்ள டேங்கருக்கு எரிவாயு மாற்றப்பட்டது.
மீட்பு பணிகள்
அப்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து இரு கப்பல்களிலும் தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பலர் சிக்கினர். தகவல் அறிந்த ரஷ்ய கடற்படை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
6 பேர் மாயம்
இந்த விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 14 பேர் பலியானதாக ரஷ்ய கடற்படை ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும், கப்பலில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். இவர்களில் இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 6 பேரை காணவில்லை.
விபத்தில் மாயம்
மோசமான வானிலை காரணமாக மாயமானவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ என்ற கப்பலில் பணியில் இருந்த மாலுமியான குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புத்தன் துறையை சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் செபாஸ்டின் பிரிட்டோ (24) விபத்தில் மாயம் ஆனார்.
உறவினர்கள் கலக்கம்
அவரை தேடும் பணியில் ரஷ்ய கடற்படை ஈடுபட்டு வருவதாகவும் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இந்திய தூதரகம் தரப்போ அல்லது மாவட்ட நிர்வாகம் தரப்போ எந்த வித தகவல்களையும் கேட்டு பெறவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கலக்கம்
மேலும் கடலில் மாயமான தங்களது மகனின் நிலை குறித்து உரிய தகவல்கள் கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உறவினர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.