கன்னியாகுமரியில் ஆதி யோகி ரதம்.. மக்கள் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி: தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கோவையில் இருந்து கன்னியாகுமரி வந்த ஆதியோகி ரதத்துக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 25-வது மஹா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4-ம் தேதி 112 அடி ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, நள்ளிரவு தியானம், தலைசிறந்த கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், மஹா அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும், ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சம் மற்றும் சர்ப்ப சூத்திரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
மக்கள் ஆதியோகியை தரிசிக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 5 ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள ஆதியோகியில் இருந்து கடந்த பிப்ரவரி 1-ம் தேதி புறப்பட்ட ஒரு ரதம் கன்னியாகுமரிக்கு வந்தது.கன்னியாகுமரி மக்கள் ஆதியோகி ரதத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், பூதபாண்டி, வடசேரி சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில், வடிவீஸ்வரம், சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஆதியோகி ரதம் ஊர்வலமாக சென்றது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து அருளை பெற்றனர்.
இந்த ரதம் வரும் 17-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல உள்ளது. பின்னர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று மார்ச் 3-ம் தேதி கோவை சென்றடையும்.