கன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு...? ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவு என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் தம்மை பற்றி கற்பனைக்கு எட்டாத செய்திகள் வருவது வாடிக்கையாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் குஷ்பு போட்டியிடக்கூடும் என வெளிவரும் தகவல் பற்றி விளக்கம் அறிய ஒன் இந்தியா தமிழ் குஷ்புவை தொடர்புகொண்டு பேசியது.
அப்போது நம்மிடம் அவர் கூறியதாவது;
முதலியார் சமூகத்தை புறக்கணிக்கிறதா திமுக.. "அவர்களுக்கு" மட்டும்தான் பதவியா.. கிளம்பும் ஆதங்க குரல்
எனக்குத் தெரியாது
'' நீங்கள் சொல்வது எனக்கே புதிதாக இருக்கிறது. கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியில் நான் இறங்கவேயில்லை, அப்படி ஒரு திட்டமும் இதுவரை என்னிடம் இல்லை. அப்படியிருக்கும் போது இதற்கு என்ன பதில் சொல்ல முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் குஷ்பு அந்த தொகுதியில் சீட் கேட்கிறார் இந்த தொகுதியில் சீட் கேட்கிறார் என வதந்திகள் பரப்பப்படும். இதனால் இது போன்ற வதந்திகள் எனக்கு புதிதல்ல. அரசியலுக்கு வந்தது முதல் இதை பார்த்து வருகிறேன்.''
கட்சியின் முடிவு
''கன்னியாகுமரி தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு தெரியும். கட்சி முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. குஷ்பு சீட் கேட்டார் கட்சி கொடுக்க மறுத்ததால் வருத்தத்தில் இருக்கிறார் என வழக்கம்போல் இப்போதும் செய்திகள் உலவவிடப்படும். என்னை பொறுத்தவரை நான் வதந்திகளை காது கொடுத்து கேட்பதில்லை''.
தலைமை முடிவு
''நிச்சயம் வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளருக்கு கன்னியாகுமரி தொகுதியில் தலைமை சீட் கொடுக்கும். கட்சித் தலைமை யாரை நிறுத்தப் போகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதனை ஏற்று செயல்படுவேன். மற்றப்படி இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை'' எனத் தெரிவிக்கிறார் குஷ்பு.
குஷ்பு ட்வீட்
ஈ.வி.கே.எஸ். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த போது அவரால் அழைத்து வரப்பட்டு காங்கிரஸில் இணைந்தவர் குஷ்பு. தற்போது கட்சியில் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் தமக்கு முறைப்படி தெரிவிக்கப்படுவதில்லை என்ற அதிருப்தியை அண்மையில் ட்வீட்டர் முலம் அவர் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.