நாங்குநேரி மேற்பார்வையாளராக அதிமுக உறுப்பினர்.. காங். வெளியிட்ட பகீர் பட்டியல்.. தொண்டர்கள் ஷாக்!
கன்னியாகுமரி: நாங்குநேரி தொகுதி இடைதேர்தல் மேற்பார்வையாளராக காங்கிரஸ் கட்சி சார்பாக அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரி எம்எல்ஏவாக காங்கிரஸ் உறுப்பினர் வசந்த குமார் இருந்தார். ஆனால் இவர் கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்று வென்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அங்கு இடைத்தேர்தல் வந்துள்ளது
திமுக கூட்டணி சார்பாக நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நாங்குநேரி காங். தேர்தல் பணிக்குழுவின் பட்டியல் இன்று வெளியானது.
இடைத்தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக வசந்த்குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குழு செயலாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனும், ஒருங்கிணைப்பாளராக மயூரா ஜெயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நாங்குநேரி தொகுதி தேர்தல் பணி சிறப்பு பார்வையாளராக கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட பலர் நியமிக்கப்ட்டுள்ளனர். இதில் நாங்குநேரி தொகுதி மேற்பார்வையாளராக அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது.
அதிமுக உறுப்பினர் பெயர் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் இடம்பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங். கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்தான் கே.பி.கே.செல்வராஜ்.
இவர் தற்போது நெல்லை மாவட்ட புறநகர் சிறுபான்மை பிரிவு அதிமுக துணை செயலாளராக உள்ளார்.இவரின் பெயர்தான் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் இருந்தது. இது பெரிய சர்ச்சையானதை அடுத்து தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அதில், கே.பி.கே.ஜெயக்குமாருக்கு பதில் அவரது சகோதரர் செல்வராஜின் பெயர் தவறாக இடம்பெற்றுள்ளது. கே.பி.கே.ஜெயக்குமார் தான் இடைத்தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.