ராஜராஜ.. ராஜ மார்த்தாண்ட.. சுசீந்திரம் பள்ளிச் சுவரை சுரண்டியபோது.. கண்டெடுக்கப்பட்ட ராஜ முத்திரை
Recommended Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வண்ணம் தீட்ட பள்ளியில் சுவரை சுரண்டிய போது திருவாங்கூர் மன்னர் கால ராஜ முத்திரை மற்றும் பிரிட்டிஷ் முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை காண மாணவர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
98 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முத்திரை அப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இளைய தலைமுறையினரும் முத்திரைகளை தெரிந்து கொள்ளும் வகையில் முத்திரைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கும் முயற்சியை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
1956 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்டம் கேரளா திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தாலும், மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழமையான பல்வேறு கட்டிடங்கள் திருவாங்கூர் சமஸ்தான ராஜ முத்திரையுடன் கம்பீரமாக காட்சியளிப்பதை இன்றும் காணலாம்.
ராஜ முத்திரை
இதனிடையே நாகர்கோவில் அருகே சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலை பள்ளியில் பராமரிப்பு பணிகளின் போது திருவாங்கூர் சமஸ்தான ராஜ முத்திரையும் பிரிட்டிஷ் முத்திரையும் கண்டெடுக்கப்பட்டது.
சீரமைப்பு பணி
1921 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜாவின் 60 ஆவது பிறந்தநாள் நினைவாக கட்டப்பட்ட இந்த பள்ளி கோடை விடுமுறை முடிந்து சில நாட்களில் திறக்கப்படும் நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரிட்டிஷ் முத்திரை
இதுநாள் வரை மன்னர் கால பள்ளி என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லாமல் இருந்த நிலையில் பள்ளியில் சுவற்றில் வண்ணம் தீட்டுவதற்காக பணியாளர்கள் சுவரை சுரண்டும் போது திருவாங்கூர் சமஸ்தான முத்திரை மற்றும் பிரிட்டிஷ் கால முத்திரையும் தெரிந்துள்ளது. சுமார் 98 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே தெரிந்த மன்னர் கால முத்திரை மற்றும் பிரிட்டிஷ் முத்திரை பள்ளியின் சிறப்பிற்கு கூடுதல் ஆதாரமாக அமைந்துள்ளது.
பள்ளி நிர்வாகம்
இதனிடையே பழங்கால முத்திரைகளை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக பழமை மாறாமல் வண்ணம் தீட்ட நினைத்த பள்ளி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு இது குறித்த தகவல்களை தொல்லியல் துறையினருக்கும் தெரிவித்துள்ளது.