கன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி- காவல்துறை
சென்னை: கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை அருகே தந்தை பெரியார்சிலை மீது காவி சாயம் வீசப்பட்டது சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் பாரத் சேனா அமைப்பின் அருண் கிருஷ்ணன் என்பவர் போலீசில் சரணடைந்தார்.
இவர் மீது தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதேபோல் புதுவையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வந்தே பாரத் விமானம்.. ஏஜெண்டுகள் கூடுதல் கட்டணம் கேட்டால் தராதீங்க.. மத்திய அரசு அறிவுரை
அண்ணாசிலையில் காவி கொடி
மேலும் கல்வராயன் மலையில் பெரியார் நீர் வீழ்ச்சி பெயர் பலகை மீதும் காவி சாயம் பூசப்பட்டது. இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்டுள்ளது. அத்துடன் பழைய சீரியல் பல்பு, சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் ஆகியவையும் அண்ணாசிலையின் மீது வீசப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாசிலையை அவமதித்தவர்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டாலின் கண்டனம்
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்! தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க என வலியுறுத்தி உள்ளார்
வைகோ கடும் கண்டனம்
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள். தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதித்து வந்த சாதி, மதவெறி பாசிசவாதிகள் தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் அவமதித்துள்ளனர். இது தமிழ் அன்னையையே களங்கப்படுத்திய செயலாகும்.
காலிகளை கைது செய்க
இத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்பாக உள்ளன. மேலும் மேலும் இதுபோன்ற காலித்தனமான செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றார்
குண்டாஸில் அடைக்க வேண்டும்- ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது? கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். மாற்று நிற கொடிகளை போர்த்துவதன் மூலம் அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது. இத்தகைய இழிசெயலை செய்தவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
என்ன செய்யும் அரசு?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான திருமாவளவன் தமது அறிக்கையில், சனாதனிகளின் அற்ப அரசியல். பெரியாருக்கு அடுத்து அண்ணாவையும் சீண்டுவது அவர்களின் வெட்க கேடான புத்தியின் இழிநிலை. இது திமுக, திக போன்ற இயக்கங்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே விடப்பட்டுள்ள சவால். ஆட்சியிலுள்ள அதிமுக என்ன செய்யப்போகிறது?என கேள்வி எழுப்பியுள்ளார்.
மனநோயாளி வீசிய காவி துண்டு
இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், குழித்துறை அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது