மீனவர் வேடத்தில் தாவூத்.. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்தவர்.. வில்சன் கொலையில் இன்னொரு கைது!
Recommended Video
கன்னியாகுமரி: வில்சனை கொன்றதில்.. இன்னும் எத்தனை பேர் பிடிபட உள்ளனரோ தெரியவில்லை.. மீனவர் வேடமிட்டு தலைமறைவாக இருந்த மற்றொரு தீவிரவாதியை போலீஸார் கோழி அமுக்குவது போல அமுக்கி.. கைது செய்துள்ளனர். அவரிடம் மிக தீவிரமான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
களியக்காவிளை செக்போஸ்ட்டில் ஸ்பெஷல் எஸ்ஐ வில்சன் கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம், கேரளம், உட்பட பல்வேறு மாநிலங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து போலீசார் பலரை கைது செய்து வருகின்றனர். இதற்கு கேரள மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அதிகம் என்றே சொல்லலாம்.
2 பேர் கைது
2 பயங்கரவாதிகளான அப்துல் ஷமிம், தவுபிக் ஆகியோர்தான் முதலில் கைதானவர்கள்.. உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் இவர்கள் கைதானார்கள். இருவருமே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்.. இந்த விவகாரத்தில் தமிழக கியூ பிரிவு போலீசார் சிறப்பான விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போதுதான், காஞ்சிபுரத்தில் இவர்களுக்கு சிம்கார்டு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
சிம் கார்டுகள்
அதனால் போலீசார் காஞ்சிபுரத்துக்கு சென்று அங்கிருக்கும் செல்போன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.. போலி அட்ரஸ் தந்து பயங்கரவாதிகளுக்கு ஏகப்பட்ட சிம் கார்டுகள் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இன்னொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.. இவ்வளவு கெடுபிடிகள், கைது நடவடிக்கைகள் நடந்தும் இந்த தீவிரவாதி ராமநாதபுரத்திலேயேதான் இத்தனை நாள் தங்கி இருந்துள்ளார்.. பெயர் தாவூத்.
மீனவர் வேடம்
ஆனால் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி மீனவர் வேடத்தில் இங்கு நடமாடி வந்துள்ளார். போலீசாரின் தீவிர வேட்டைக்கு பிறகு இவர் சிக்கி உள்ளார்.. நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு தாவூத் தான் பண உதவி செய்தது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்ல, இவர் ஏற்கனவே என்ஐஏவால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலையானவராம்.. தொடர் விசாரணை இவரிடம் நடந்து வருகிறது.
அதிரடிகள்
அதனால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது! அடைக்கலமாக வீடு தந்து உதவியது ஒருத்தர், சிம்கார்டு தந்து உதவியது ஒருத்தர், பணம் தந்தது உதவியது ஒருத்தர் என அடுத்தடுத்த நபர்கள் சிக்கி வருகிறார்கள்.. இதனால் வில்சன் கொலை வழக்கு வேகமெடுத்து வருவதுடன், பெரும் திருப்பத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.