அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தை திருவிழா.. திருத்தேரோட்டம்
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்திபெற்ற அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. பதினொன்றாம் திருவிழாவான நேற்று (28 ஆம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும் தொடர்ந்து திருநடை திறத்தலும், காலை 6 மணிக்கு அய்யாவுக்குபணிவிடையும் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமைப்பதி பள்ளி அறையில் இருந்து அய்யா பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா கொலுவீற்றிருக்க தேரோட்டம் துவங்கியது. காவி உடை அணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டவாறு தேர் வடம் பிடித்து இழுத்தனர்
முத்து குடைகள் முன்செல்ல திருத்தேர் கீழரத வீதி, தெற்குரதவீதி , மேற்கு ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் நண்பகல் இரண்டு மணிக்கு தலைமைப்பதியில் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் பூ உட்பட்ட பொருட்களை அய்யாவுக்கு சுருளாக படைத்து வழிபட்டனர்.
திருத்தேர் மாலை 8 மணி அளவில் நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.