அணிவகுத்து சிறகடித்துப் பறக்கும் அழகுப் பறவைகள்.. குமரி வானில் அற்புதக் காட்சிகள்
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள், அரிய வகை பறவைகள் குறித்த இந்த கணக்கெடுக்கும் பணிகளில் வனத்துறையினர்,தன்னார்வலர்கள் மாணவர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியா, சைபிரியா, ரஷ்யா, மங்கோலிய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெப்பமான தட்பவெட்ப நிலை ஏற்படுவதால் பறவைகள் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.
அங்குள்ள பறவைகள் இந்தியாவில் முக்கிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து வந்துவிடுவது வழக்கம். தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வந்து முகாமிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் வெளிநாடுகளில் நாடுகளில் உள்ள பிளம்பிங்கோ, ஊசிவால் வாத்து, உள்ளான் வகைகள் , சோவலர் வாத்து இனங்கள், ரெட் சேன், கிரீன் சேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகளும், இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள கூழை கடா, பல்வேறு நாரை மற்றும் கொக்கு இனங்கள் உள்ளிட்ட உள் நாட்டு பறவைகளும் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி, சுசீந்தரம், தேரூர் , சாமிதோப்பு , புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து மற்றும் பறவைகள் வாழ ஏற்புடைய சூழல் குறித்த நீர் நிலை பறவைகளின் ஆய்வு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான மணக்குடி, சாமிதோப்பு ,புத்தளம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்றது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த பணிகளில் தற்போது மூன்றாவது இறுதி கட்டமாக இரண்டு நாட்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று துவங்கியது. இதில் வனத்துறையினர்,தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளதாகவும் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் இயற்கை சூழல் ஏதுவாக அமைந்துள்ளதால் பறவைகளின் எண்ணிகையும் அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.